வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள்

ஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil On Jan 11, 2023 Viewers: 466


வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள்

வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் 

                இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் மீது அவதூறு பேசியுள்ள மதவெறியர் நரசிங்கானந்த் சரஸ்வதி மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது மகாராஷ்டிராவின் அஹ்மத்நகர் போலீஸ்.

                போலீஸ் பதிவு செய்திருக்கும் எஃப்,.ஆரில் கூறப்பட்டுள்ளதாவது:

                "இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி .பி.ஜே. அப்துல் கலாம் ஜிஹாதி நவம்பர் ஒன், அவரது பதவிக் காலத்தின் போது அவர் அணுகுண்டின் வடிவமைப்பு முறையை (ஃபார்முலா) பாகிஸ்தானுக்கு கொடுத்தார் என்று நரசிங்கானந்த் பேசியிருந்த வகுப்புவாதப் பேச்சு யூடியூப்பில் பகிரப்பட்டது. அத்தோடு, பஞ்சாப் கேசரி செய்தி ஏட்டியன் ஆன்லைன் பதிப்பிலும் இது வெளியாகியுள்ளது.

                மேலும், அப்துல் கலாம் டி.ஆர்.டி.. (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு) இயக்குனராகவும் ஜனாதிபதியாகவும் இருந்த போது, ஹிந்து விஞ்ஞானிகள் பலர் கொலை செய்யப்பட்டனர். பயங்கரவாதி அஃப்ஸல் குருவுடன் அப்துல் காலம் தொடர்பு வைத்திருந்தார். இதற்காக ராஷ்ட்ரபதி பவனில் அவர் ஒரு ஸ்பெஷல் செல்" அமைத்திருந்தார். அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம், ஜமாலியா மில்லியா இஸ்லாமியா, தாருல் உலூம் தேவ்பந்த் ஆகியவை இந்தியாவை ஆப்கானிஸ்தானாக மாற்றும். 2029 ல் இந்தியாவில் முஸ்லிம் பிரதமர் இருப்பார் அவர் இருண்ட காலத்தை நோக்கி இந்நாட்டை வழி நடத்துவார் என்றும் நரசிங்கானந்த் பேசி இருந்தார்'' இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                (மக்கள் ரிப்போர்ட் வார இதழ் 19 மார்ச், இதழ் 25)

                மேற்கண்ட மதவெறியரின் பேச்சுகளை படிக்கும் போது இந்தியாவில் இப்படிப்பட்டவர்கள் மிக மிக வரம்பு மீறி சென்று கொண்டிருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

                அப்துல் கலாமைப் பொறுத்தவரை நமது காலத்தில் வாழ்ந்து சில வருடங்களுக்கு முன்புதான் மரணமடைந்தார். அவரைப் பற்றி இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லோருக்குமே தெரியும்.

                நாட்டு நலனுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். தனது பணியிலும் ஜனாதிபதி பதவியிலும் தூய்மையை பேணியவர். இது இந்திய மக்கள் அனைவரும் அறிந்த விஷயம். அதனால்தான் அவருடைய நினைவு நாளில் இந்து மக்கள், தெருக்களில் அவருடைய படத்தை வைத்து மாலை போட்டு நினைவு நாள் அனுசரிப்பதை நாம் பார்க்கிறோம்.

                இப்படியெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த இந்த நல்ல மனிதரை அவதூறாக பேசுகிறார்கள் என்றால் இவர்களின் மதவெறி கொடூரம் எவ்வளவு உச்சத்திற்கு சென்றிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

                அப்துல் கலாம் விஞ்ஞானியாகவும் ஜனாதிபதியாகவும் தான் இருந்தார். நேரடியாக அனைத்தையும் செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட பிரதமர் போன்ற பதவியில் இருக்கவில்லை.

                கடந்த டிசம்பரில் ஹரித்வாரில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிற விதத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட மனித குல விரோதிகளில் ஒருவர் தான் இந்த நரசிங்கானந்த். இவர் .பி மாநிலம் காஜியாபாத் தஸ்னா தேவி கோயிலின் தலைமை பூசாரி.

                முஸ்லிம்கள் மற்றும் பெண் அரசியல்வாதிகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய மற்றும் வெறுப்புப் பேச்சுகள் பேசியதற்காக 20க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்.

                இவரும் இவர் போன்றவர்களும் பி.ஜே.பி கட்சியோடு மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் என்ற தகவலும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                இப்படி எல்லோருக்கும் தெரிந்த சிறந்த ஜனாதிபதியாக இருந்த உயர்ந்த மனிதரை ஹிந்து விஞ்ஞானிகளை கொன்றதாகவும் அணுகுண்டு வடிவமைப்பு முறையை பாகிஸ்தானுக்கு கொடுத்ததாகவும் துணிச்சலாக இவர் சொல்கிறார். அதை சிலர் பரப்பவும் செய்கிறார்கள்.

                இது குறித்து நாம் சிந்திதுப் பார்த்தால் இதைத்தான் இந்த மத வெறியர்கள் பலகாலமாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இஸ்லாமிய மன்னர்கள் ஹிந்துக்களை கொன்றார்கள் என்றும் அவர்களின் ஆலயங்களை இடித்தார்கள் என்றும் இவர்கள் பலகாலமாக சொல்லிக் கொண்டிருப்பதும் இப்போது அப்துல் கலாம் குறித்து நரசிங்கானந்த் சொல்வது போலத்தான்.

                அப்துல் கலாம் விஞ்ஞானியாகவும் ஜனாதிபதியாகவும் தான் இருந்தார். நேரடியாக அனைத்தையும் செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட பிரதமர் போன்ற பதவியில் இருக்கவில்லை. அப்படியிருந்தும் அவரைப் பற்றி இவ்வளவு பெரிய அவதூறு கூறுகிறார்கள் என்றால் எல்லா அதிகாரங்களையும் தங்கள் கைகளில் வைத்திருந்த அந்த மாமன்னர்கள் மீது அவதூறுகள் சொல்லாமல் இருப்பார்களா?

                நாட்டின் நிர்வாகத்தில் நேரடியாக காரியமாற்றுவதற்கு அதிகாரமில்லாத பதவியில் இருந்த அப்துல் கலாமுக்கு கிடைத்த நற்பெயரைக் கண்டு ஒரு முஸ்லிமுக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்று அவதூறு பேசுவார்கள் என்றால், பலத்துடனும் மக்களுக்கு நன்மை செய்தும் ஆட்சி செய்த அந்தக் கால முஸ்லிம் மன்னர்கள் பற்றி அவதூறு பேசுவார்கள்தானே!...

                சிறந்த முறையில் ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் குறித்து எப்படியெல்லாம் அவதூறாக வரலாறு என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள் என்று பார்போம்.

                "இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இசுலாகிய  மன்னர்கள்'' என்ற புத்தகத்தில் சமகால வரலாற்று புரட்டர் ஜகாதா என்பவர் மன்னர் குத்புத்தீன் ஐபக் பற்றி எழுதியிருப்பது:

                " சமய வெறிமிக்கவராக, இரக்கமற்ற கொலைகாரராக இலட்சக்கணக்கான இந்துக்களை குத்புத்தீன் ஐபக் கொன்று குவித்தார்'' (பக்கம் 12)

                இவர் புத்தகத்தில் எழுதியுள்ள முதல் மன்னரைப் பற்றி இப்படிப் பதிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு முந்தய பக்கங்களில் இவருக்கு முஸ்லிம்களிடமிருந்தே பல இடையூறுகள் வந்ததால் தனது ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு சிரமப்பட்டார் என்ற தகவலை பதிவு செய்துள்ளார். மட்டுமின்றி. "ஆட்சிக்கு வந்த பின் இந்திய மண்ணின் புகழ்பெற்ற அரச குலத்தவர்களான இராஜபுத்திரர்களுடன் மோதல் போக்கை குத்புத்தீன் ஐபன் தவிர்த்து விட்டார்'' என்றும் எழுதியிருக்கிறார். (பக்கம் 11)

                பலவீனத்தின் காரணமாக சமாதான வழிமுறையை கையாண்ட ஐபக், இந்துக்கள் தனக்கெதிராக கிளர்ந்தெழும் விதத்தில் இந்து பொது மக்களை எப்படி கொலை செய்வார்? இந்த ஜகாதா, வேறு சில முஸ்லிம் மன்னர்களும் இப்படி அநியாயமாக கொலை செய்ததாக எழுதி வைத்திருக்கிறார்.

                இதே போன்ற அநியாயமான குற்றச்சாட்டுதான் முஸ்லிம் மன்னர்கள் பிற மத ஆலயங்களை இடித்தார்கள் என்ற குற்றச்சாட்டும். இந்த குற்றச்சாட்டில் மிகப் பிரபலமானது மாமன்னர் பாபர் அவர்கள், ராமர் கோயிலை இடித்து அதே இடத்தில் பாபரி மஸ்ஜிதை கட்டினார் என்பது. இந்தப் பொய் குற்றச்சாட்டை சொல்லியே பாபரி மஸ்ஜிதை அநியாயமாக இடித்தார்கள் மத வெறியர்கள்.

                அதன் பின்பு பல்லாண்டுகள் நடந்த பாபரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பில், " கோயில் இடிக்கப்பட்டு பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டதாக சொல்லப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை'' என்று 2019ம் வருடம்தெளிவு படுத்தியது உச்ச நீதிமன்றம். அத்துடன் 1949ம் வருடம் டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் பாபரி மஸ்ஜிதுக்குள் இரவோடு இரவாக முஸ்லிம்களுக்குத் தெரியாமல் கற்சிலைகள் வைக்கப்பட்டு பள்ளிவாச-ல் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறியது உச்ச நீதிமன்றம். ஆனாலும் சில நெருக்கடிகள் காரணமாக மஸ்ஜிதின் இடத்தில் கோயில் கட்டலாம் என்ற தீர்ப்பு வந்தது.

                ஆக மத வெறியர்கள் எந்த பள்ளிவாசலை வைத்து பொய்களை சொல்லி நாடு முழுவதும் குழப்பமும் கலவரங்களும் செய்து கொண்டிருந்தார்களோ அந்த பள்ளிவாசல் விஷயத்தில் இவர்கள் சொல்லிக் கொண்டிருந்தது பெரும் பொய் என்பது தெளிவாகி விட்டது.

                இதே நிலைதான் மற்ற இடங்களில் கோயில்கள் இடிக்கப்பட்டதாகவும் இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுவதின் நிலையும்.

                எல்லா மன்னர்களையும் போல முஸ்லிம் மன்னர்களும் நாடாளும் விருப்பத்தினால்தான் இந்தியாவுக்கு வந்தார்கள். எண்ணிக்கையில் சிறுபான்மை மதம் சார்ந்தவர்களாக இருந்த அவர்கள் பெரும்பான்மையாக இருந்த இந்து மக்களை மதத்தை காரணமாக வைத்து கொலை செய்வதிலும் அவர்களின் ஆலயங்களை இடிப்பதிலும் ஈடுபட்டிருந்தால் இந்துக்கள் மத உணர்வால் தூண்டப்பட்டு ஒட்டு மொத்தமாக முஸ்லிம் மன்னர்களுக்கு எதிராக போர் செய்து விரட்டி அடித்திருப்பார்கள். ஏனென்றால் தங்களின் மதத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதிகார வர்க்கத்துடன் மக்கள் போராடவே செய்வார்கள். அப்படி எதுவும் நடக்காமல் ஏறத்தாழ எண்ணூறு வருடங்கள் முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்திருக்கிறார்கள். இது முஸ்லிம் மன்னர்கள், மத சகிப்புத்தன்மையுடன் நல்லாட்சி நடத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

                நாம் நன்றாக கவனித்தால் ஒரு விஷயத்தை அறிந்து கொள்ளலாம். இந்தியாவிற்கு இஸ்லாம் வருவதற்கு முன்பு புத்தரின் போதனைகள் மூலமும் புத்த மதத்தவர் மூலமும் புத்த மதம் பெரிய அளவில் பரவி மிக அதிகமான மக்கள் அந்த மதத்தை தழுவியிருந்தார்கள்.

                அப்போதிருந்த இந்துமத வெறியர்கள் புத்த மதமக்களை கொடுமைப் படுத்தவும் புத்த மத ஆலயங்களை இடிக்கவும் செய்தார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. ஆக இவர்கள் செய்த பாவங்களையும் கொடுமைகளையும் இப்போது முஸ்லிம்கள் மீது பழிபோட்டு பேசுகிறார்கள்.

                (முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்: உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணைவைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள் : ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும் (அல்குர்ஆன் 3 : 186)


-மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil