கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1

சட்டங்கள் | கொடுக்கல் வாங்கல் by அப்துர்ரஹ்மான் மன்பஈ On May 24, 2014 Viewers: 2772


கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1

கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதற்கும் தேவைப்படுபவருக்குக் கடன் கொடுத்து உதவுவது ஆர்வமூட்டப்பட்ட நற்செயல் என்பதற்கும் குர்ஆனிலும், ஹதீஸிலும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன.

கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 

கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓன்று, மனிதர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கடன் வாங்காமல் இருக்க முடிவதில்லை. எனவே அல்லாஹுவும் அவனது தூதரும் கடன் கொடுக்கல் வாங்கலுக்கான சட்டங்களையும் முறைகளையும் நமக்கு வகுத்துத் தந்துள்ளனர். அவற்றை அறிந்து செயல்படுவது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு பயனளிக்கும்.

கண்ணீர் இல்லாத வாழ்க்கைக் கூட சிலருக்கு அமைந்துவிடுகிறது ஆனால் கடன் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் அமையுமா என்பது சந்தேகம் தான்.

கடன் அன்பை முறிக்கும் என்பது நமக்கு மட்டும்தான் பொருந்தும், நாட்டுக்குப் பொருந்தாது போலும்.

அவசரத்திற்கு ஒரு பத்தாயிரம் ரூபாயை கடனாக வாங்கிவிட்டு, அதை திருப்பிக் கட்டுவதற்குள் படாதபாடு படவேண்டியிருக்கிறது. இதுகூட, கூத்தடிக்கவோ, கும்மாளமடிக்கவோ வாங்குகின்ற கடன் அல்ல, குடும்பத்தேவைக்காக வாங்குவதுதான்.

ஆனால் நம்ம நாடு இந்தியா அப்படியா இருக்கிறது?

யாரெல்லாம் கடன் தருவார்களோ, அவர்கள் அத்தனை பேரிடமும் கைநீட்டிக் கடன் வாங்குவதற்குத் தயக்கமே காட்டாத நாடு. காலடியில் கிடக்கிற இலங்கையிடம் கூடக் கைநீட்ட வெட்கப்படாத நாடு.

இப்படி வாங்கி இப்போது இந்தியாவின் கடன்சுமை 35 லட்சம் கோடியை நெருங்கிவிட்டது. வருடத்திற்கு மூன்று லட்சம் கோடியை வஞ்சகமில்லாமல் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது இந்தியா. இதன் விளைவே, பெருமைமிக்க ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் சராசரியாக 30ஆயிரம் ரூபாய் கடன்சுமை விழுந்திருக்கிறது.

தேவையில்லா திட்டங்களுக்கும், வீண் ஆடம்பரங்களுக்கும் மந்திரிகள் முதல் அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை ஊழல் செய்வதற்கும் இப்படிக் கடனாக வாங்கப்படும் பணம் பயன்படுத்தப்படுகிறது

எனக்குக் கடன் என்றாலே பிடிக்காது, நான் கடன் வாங்குறதும் இல்லை கொடுக்குறதும் இல்லை என்று வைராக்கியமாகச் சொல்கிற சிலரும் இருக்கிறார்கள். நீங்கள் வாங்காவிட்டால் என்ன? உங்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் வாங்குகிறோமே என்று அரசாங்கம் செய்கிறது. இந்தியன் என்றாலே இன்னொரு பொருள், கடன்பட்டவன் என்பதுதான். கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று சின்ன வயதில் படித்தது. நல்ல வேளையாக இந்திய வேந்தர்களுக்கு அது இல்லாமல் போனது.

மார்க்க அனுமதி

கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதற்கும் தேவைப்படுபவருக்குக் கடன் கொடுத்து உதவுவது ஆர்வமூட்டப்பட்ட நற்செயல் என்பதற்கும் குர்ஆனிலும், ஹதீஸிலும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன.

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! ஒரு குறிப்பிட்டத் தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால், அதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள், எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்.எழுதுபவன் எழுதுவதற்கு மறக்கக் கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக்கொடுத்தபடி அவன் எழுதட்டும், இன்னும் யார்மீது (திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும், அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும், மேலும் (வன் வாங்கிய)தில் எதையும் குறைத்துவிடக் கூடாது. இன்னும் யார்மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ, அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது பலவீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய பொறுப்பாளர் நீதமாக வாசகத்தைச் சொல்லட்டும். தவிர (நீங்கள் சாட்சியாக இரக்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள், ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி மறந்துவிட்டால் இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும். அன்றியும், சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது, தவிர சிறிதோ, பெரிதோ அதை அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள். இதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதமானதாகும். சாட்சியத்திற்கு உருதியுண்டாக்குவதர்க்காகவும், இன்னும் இது உங்களுக்குச் சந்தேகம் ஏற்ப்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும், எனினும் உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர அதை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் மீது குற்றமில்லை. ஆனால் (அவ்வாறு) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் அன்றியும் எழுதுபவனுக்கும் சாட்சிக்கும் (உங்களுக்குச் சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) எவ்வித இடையூறும் அளிக்கப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக்கொடுக்கின்றான், தவிர அல்லாஹ்வே எல்லா பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.” திருக்குர்ஆன் 2:282.

இந்த திருக்குர்ஆன் வசனம் கடன் கொடுக்கல் வாங்கல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை உணர்த்துவதுடன் அது தொடர்பான சட்டங்களையும் கூறுகிறது.

நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கடன் பெற்றிருந்தார்கள், அதை எனக்குத் திருப்பித் தரும்போது சற்று அதிகமாகவும் கொடுத்தார்கள்

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 2394.

இதுபோன்ற பல ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதற்கு ஆதாரங்களாக உள்ளன.

கடன் வாங்குபவர் கவனிக்க வேண்டியவை

கடன் வாங்குவது நிர்பந்தம் கருதி அனுமதிக்கப்பட்டது, ஆகவே இயன்றவரை கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வாங்கியக் கடனைத் திருப்பி கொடுப்பதற்குத் தாமதமானாலும் அல்லது கொடுக்க இயலாமல் போனாலும் இம்மையிலும் மறுமையிலும் மனிதன் பாதிப்புக்குள்ளாக வேண்டியது ஏற்படும்.

நபி(ஸல்) அவர்கள்அல்லாஹ்வே பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்என்று தொழுகையில் துஆ செய்துகொண்டிருந்தார்கள், அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அதிகமாக கடனிலிருந்து பாதுகாவல் தேடுகிறீர்களே! என்றார். அதற்க்கு நபியவர்கள் ஒரு மனிதன் கடன்பட்டுவிட்டால் பொய் பேசவும், வாக்குறுதிக்கு மாறு செய்யவும் ஆரம்பித்துவிடுகிறான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி 2397

கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்க தாமதமானாலோ அல்லது கொடுக்க முடியாத நிலைக்கு ஆளானாலோ மனிதன் பொய் பேசியும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்தும் தீமையை சம்பாதிக்க ஆரம்பித்துவிடுகிறான்.

கடன் வாங்குவதால் பல தீமைகளை செய்யவேண்டிய நிலை மனிதனுக்கு ஏற்ப்படுவதால் தன்னால் இயன்றவரை மனிதன் கடன் வாங்குவதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகிறது.

வாங்கியக் கடனை திருப்பிக் கொடுக்காமல் மரணித்துவிட்டால் பிற மனிதனுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கொடுக்காத குற்றம் வந்து சேரும்.

ஸஃத் பின் அல்அத்வால் (ரலி) அவர்களின் சகோதரர் மரணிக்கையில் முன்னூறு திர்ஹமை விட்டுச் சென்றார். அந்த தொகையை மரணித்தவரின் பிள்ளைகளுக்காக செலவழிக்க வேண்டுமென்று வைத்திருந்தார் ஸஃத், அவரை நோக்கி நபி(ஸல்) அவர்கள் உன் சகோதரர் அவர் வாங்கிய கடனால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்காக அதனை அடைத்து விடு! என்றார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே அவருடைய கடனெல்லாம் நான் அடித்துவிட்டேன். ஆனால் ஒரு பெண்மணி தனக்கு இரண்டு தீனார்கள் அவர் கொடுக்க வேண்டுமென்று வாதிட்டார், அவரிடம் ஆதாரம் எதுவுமில்லை என்பதால் நான் கொடுக்கவில்லை என்றார். அதற்க்கு நபியவர்கள் அப்பெண் உண்மைதான் சொல்கிறார் அந்தக் கடனையும் அடைத்து விடு! என்றார்கள்.

நூல்கள்: அஹ்மத் 20088, இப்னுமாஜா 2433.

கடன் வாங்கி அதை அடைக்காமல் இறந்து போகிறவருக்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மாட்டார்கள். இந்நிலையில் ஒரு மய்யித் கொண்டுவரப்பட்டது. அவர்மீது கடன் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கிறதா? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்க்கு, ஆம் இரண்டு தினார்கள் என்று மக்கள் பதிலளித்தனர், அப்படியானால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகதாதா(ரலி) அல்லாஹ்வின் தூதரே அதை அடைப்பது என் பொறுப்பு என்றார். அதன் பின் நபி(ஸல்) அந்த மய்யித்திற்காக தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்கள்: அஹ்மத் 14192, அபூதாவூத் 3345

இது மட்டுமின்றி அல்லாஹ்வின் வழியில் போர் செய்து உயிர் தியாகம் செய்தவருக்கு தவறுகளெல்லாம் மன்னிக்கப்பட்டாலும் கடன் மட்டும் மன்னிக்கப்படாது.

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் பொறுமையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (எதிரிகளை) முன்னோகியவாறும் புறமுதுகு காட்டாமலும் அல்லாஹ்வின் வழியில் போரிட்டுக் கொல்லப்பட்டால் என் தவறுகளெல்லாம் மன்னிக்கப்படுமல்லவா? என்று கேட்டார். அதற்க்கு ஆம் என்று பதிலளித்தார்கள். நபியவர்கள் அம்மனிதர் திரும்பிச் செல்கையில் அவரை அழைத்து மீண்டும் அவரது கேள்வியைக் கேட்கும்படி கூறினார்கள். முன்பு கேட்டதையே அவர் மீண்டும் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஆம் கடனைத் தவிர! இவ்வாறு ஜிப்ரீல் எனிடம் இப்போது கூறினார்கள் என்றார்கள்.

நூல்கள்: நஸஈ 3156, (இதன் கருத்து முஸ்லிம், திர்மிதியிலும் உள்ளது)

அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக கடன் வாங்குவதற்க்கே இந்த எச்சரிக்கை என்றால் அனுமதிக்கப்படாத காரியங்களுக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் கடன் வாங்கினால் எவ்வளவு பெரிய தவறாகும் என்பதைப் புரியலாம்.

கடன் வாங்கி அதை வாங்கிய விதத்தில் திருப்பிக் கொடுக்க இயலாத நிலை ஏற்ப்பட்டால் எதையாவது விற்றாவது அந்தக் கடனை அடைக்கிற நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

கடன் கொடுப்பவர் கவனிக்கவேண்டியவை

கடன் கொடுப்பது ஒருவருக்கு ஏற்ப்பட்டிருக்கும் இக்கட்டிலிருந்து விடுவிப்பதாயிருப்பதால் அது அல்லாஹுவிடம் நன்மையை பெற்றுத் தரக்கூடிய நற்செயலாக உள்ளது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ, அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹுவும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹுவும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிராரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹுவும் மறைக்கிறான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி), நூல்: புகாரி 2442

மேலும் கடன் வாங்கியவர் அதை திருப்பித் தருவதற்கு தாமதம் ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் குறை செய்தாலோ பெருந்தன்மையாக நடந்துகொள்ள வேண்டும். அதுவும் அல்லாஹ்வின் கிருபையைப் பெற்றுத்தரும்.

வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் கடனைத் திரும்பப் பெறும்போதும் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹு அருள்புரிவானாக.” அறிவிப்பவர்: அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 2076

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்த சிறமப்படுபவரை அவர் கண்டால், தனது பணியாளர்களிடம் இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள், அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடி செய்யக் கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.”

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 2078

 

-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil