ஆய்வுகள்

September 11, 2014

தற்கொலை தீர்வாகுமா?

 தற்கொலை தீர்வாகுமா?

வாழ்க்கையில், தோல்விகள், சோதனைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள், அவமானங்கள் என்று ஏதேனும் ஏற்படும் பொது அதற்குத் தீர்வாக சிலர் தற்கொலையைத் தேர்வு செய்துகொள்கிறார்கள்.

தெய்வநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் இல்லாதிருப்பது அல்லது இவ்விரு நம்பிக்கையிலும் பலவீனம் இருப்பதுதான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம்.

எந்த கடுமையான சிரமத்துக்காகவும் தற்கொலையைத் தேர்வு செய்யக் கூடாது. ஆனால் இன்று மிகச் சிறிய சோதனையைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் தற்கொலையை நாடும் நிலை பரவி வருகிறது. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரில் சிலர் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்துகொள்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பள்ளிக்கூடத் தேர்வில் தோல்வியடைவது ஒன்றும் அத்தனைப் பெரிய தோல்வி அல்ல. ஆனாலும் இதற்கு பெரியவர்கள் தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள். தோல்வி, அவமானம் என்று வரும்போது சில பெரியவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதை அறியும் சிறுவர்கள் தமக்கும் தோல்வி, அவமானம் என்று வந்தால் தற்கொலை செய்து கொள்வது தமக்குத் தீர்வைத் தரும் என்று முடிவு செய்து கொள்கிறார்கள். இது பெரிய அவலம்!

செப்டம்பர் 10 தேதி உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தில் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஊடகங்களில் வெளிவரும் தற்கொலைப் பற்றிய செய்திகள் மூலமாகவே தற்கொலைச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. அதாவது தற்கொலை குறித்த செய்தியை வெளியிடும் ஊடகங்கள் தற்கொலை நடந்த முறை பற்றி விரிவாக விளக்கக் கூடாது. அத்துடன் தற்கொலை செய்துகொள்வது தவறு என்பதையும் அச்செய்தியுடன் குறிப்பிட வேண்டும்.

உலக அளவில் நடக்கும் தற்கொலை குறித்த புள்ளி விவரத்தையும் உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி உலகத்திலேயே மிக அதிகமாக கயானாவில் ஒரு லட்சம் பேரில் 44.2 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மற்ற நாடுகள்: ஒரு லட்சம் பேரில்வடகொரியா(38.5), தென்கொரியா(28.9), இலங்கை(28.8), லிதுவேனியா(28.2), நேபாளம், தான்சானியா (24.9), புரூண்டி(23.1), இந்தியா(21.1), தெற்கு சூடான் (19.8), ரஷியா, உகாண்டா(19.5), ஹங்கேரி (19.1), ஜப்பான் (18.5) பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகள் அதிகம் தற்கொலை நடைபெறக்கூடிய நாடுகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் நம் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக தற்கொலைகள் நடக்கின்றன என்பது இன்னொரு முக்கியத் தகவலாகும்.

தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும்:
எல்லா மனிதருக்கும் உயிர் மேல் ஆசை உண்டு. ஆனால் துன்பம் ஏற்படும்போது விரக்தியில் அவசரப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் சிலர்.

எத்தனையோ பெரும் சோதனைகளையும் அனுபவித்தவர்கள் சகிப்புத்தன்மை, நிதானம் ஆகியவற்றால் பின்பு நல்வாழ்வு வாழ்கிறார்கள். தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவமானம், சோதனை போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்காக தற்கொலை செய்பவர்கள் அவற்றை சகிப்புத் தன்மையுடன் எதிர்கொண்டு வாழ்ந்தால் பிற்காலத்தில், தான் நல்வாழ்வு வாழ்வதுடன் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை செய்பவனாக வாழலாம்.
உதாரணமாக, தேர்வில் தோல்வி அடைந்ததற்காக தற்கொலைக்கு முயற்சிக்கும் ஓர் இளைஞர், அம்முயற்சியைக் கைவிட்டு விட்டு தன் நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகளில் உழைத்தால் அவனுக்கு எதிர்கால வாழ்வு நல்வாழ்வாக அமைவதுடன் தன் பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களுக்கு உதவியாகவும் இருக்க முடியும். தன்னைச் சார்ந்தவர்களுக்கு பல நன்மைகளையும் செய்ய முடியும்.

இறைவழிகாட்டுதல்

கடும் சோதனை வரும் போது, இது என்னைப் படைத்த என் இரட்சகனின் முடிவு என்பதை எண்ணி பொறுமையாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:
ஒருபோதும் அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது, அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்! என்று நீர் கூறும்.” [அல்குர்ஆன் 9:51]

எல்லாம் வல்ல அல்லாஹ் எனக்கு விதித்தது தான் நடக்கிறது. அவன் விதிக்கு அப்பாற்பட்டு எதுவும் நடக்காது என்பதை உறுதியாக நம்பி, மேற்கண்ட இறைவசனத்தில் கூறப்பட்டதை தனக்குள் சொல்லிக் கொண்டு அதில் உறுதியாகவும் இருக்கும் ஒருவரை எவ்வளவு பெரிய சோதனையும் மனம் தளரச் செய்துவிடாது. தற்கொலை எண்ணமும் தோன்றாது.

அதே போல், எல்லா நிலையிலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். நமது முயற்சியும் உழைப்பும் நமது நாட்டம் நிறைவேறுவதற்காக நாம் செய்யும் வெளிப்படையான செயல்பாடாகும். ஆனால் அதன் முடிவை நான் ஏற்பேன் என்ற முடிவோடு இருப்பதேதவக்குல்எனும் அல்லாஹ்வை சார்ந்திருக்கும் தன்மை. இதுவும் எத்தனை பெரிய சோதனையையும் தாங்கிக் கொள்ளும் வலிமையை மனிதருக்குத் தருகிறது. மேற்கண்ட வசனத்தின் இறுதியில், “இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருப்பார்களாக!” என்று அல்லாஹ் கூறுகிறான். இக்கருத்தில் பல்வேறு இறைவசனங்கள் உள்ளன.

தற்கொலை ஒரு பெரும்பாவம், “உயிர்இறைவன் கொடுத்தது, அதைத் தானாக மாய்த்துக் கொள்ள மனிதனுக்கு உரிமை இல்லை. அல்லாஹ் கூறுகிறான்:
நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் கருணையுள்ளவனாக இருக்கிறான்.
எவரேனும் வரம்புமீறி அநியாயமாக இதைச் செய்தால் விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்.” [அல்குர்ஆன் 4:29,39]

ஒருவர் தற்கொலை செய்துகொண்டு தன் உயிரைத் தான் மாய்த்துக் கொள்கிறார் என்றால் கூட அதுவும் மறு உலக வாழ்வில் நரகத்தில் நுழைவதற்குக் காரணமாகக் கூடிய பெரும்பாவம் தான்.
உயரத்திலிருந்து உதித்து அல்லது நஞ்சு உண்டு அல்லது ஆயுதத்தால் தன்னைத்தானே குத்திக் கொண்டு இப்படி எந்த விதத்தில் தற்கொலை செய்து கொண்டாலும் அப்படிப்பட்டவர் நரகில் போடப்பட்டு அதே விதத்தில் நிலையாக வேதனை செய்யப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி 5778)

ஆகவே இறைவன் மீதும் அவனது விதி மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து அவனையே சார்ந்து வாழ்வதும், தற்கொலை நரகில் சேர்க்கும் பெரும்பாவம் என்பதை உணர்ந்து வாழ்வதும், தற்கொலைகள் நடைபெறாமல் தடுக்க காரணமாக அமையும்!

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil 

Admin
2349 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions