சலஃப் என்ற வார்த்தைக்கு ‘முன்னோர்’ என்பது பொருள். இது ‘அஸ்ஸலஃபுஸ் ஸாலிஹ்’ நல்ல முன்னோர் என்பதின் சுருக்கமாக பயன்படுத்தப்படுகிறது. ‘சலஃபி’ என்ற வார்த்தைக்கு முன்னோரைச் சார்ந்தவர் என்பது பொருளாகும். அதாவது நல்ல முன்னோரின் வழியில் நடப்பவர் என்பது இதன் கருத்தாகும்.
அதே போன்று சலஃப் வழிமுறையே பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் பலர் இந்த நல்ல வழிமுறை குறித்து தவறான புரிதலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் தவறான புரிதலையும் தவறான நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்தி திருத்துவதற்காக இந்த இரண்டாம் பாகத்தை எழுதுகிறோம் அல்லாஹ் நல்லுதவி செய்யட்டும்!
‘சலஃபுஸ் ஸாலிஹ்’ எனும் நல்ல முன்னோரின் வழிமுறையில் நடப்பதாக சொல்லிக் கொள்ளும் பலருடைய தவறான கருத்து அரசியல் ஈடுபடுவது கூடாது என்பதாகும். குடியரசு முறையில் ஆட்சி நடைபெறும் நாடுகளிலும் குறிப்பாக முஸ்லிம்கள் சிறுபான்மையானராக வாழும் நாடுகளிலும் கூட அரசியலில் ஈடுபடுவதையே இத்தகையவர்கள் குறை காண்கிறார்கள். இவர்களாக சலஃப் வழிமுறை என்பதற்க்கு ஒரு வடிவத்தை ஏற்படுத்திக் கொண்டதால் இந்த நிலை.
அபுபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் நம்முடைய சலஃபுக்களிலே முதன்மையானவர்கள். (ஒரு உதாரணத்துக்கு) அவர்கள் இருவரும் இன்றைய காலகட்டத்தில் நமது நாட்டில் இருந்து கொண்டிருந்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் ஒதுங்கி இருப்பார்களா? ஒதுங்கி இருக்க மாட்டார்கள்!
நமது இந்தியா போன்ற நாடுகளின் சூழ்நிலையில் அவ்வாறு அரசியலில் ஈடுபடும்போது மார்க்கரீதியாக ஏற்படும் சங்கடங்களை இயன்ற அளவு சமாளிக்க வேண்டும். இது போன்ற நிலையில் நாம் எப்படிச் செயல் பட வேண்டும்?
அல்லாஹ் கூறுகிறான்: “உங்களால் இயன்ற அளவு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்”
இந்த வசனத்தின் கருத்து வாழ்க்கையில் மார்க்கம் காட்டிய வழிமுறைகளை அப்படியே எடுத்து நடக்க இயலாத சூழ்நிலைகள் உண்டு அப்போது எந்த அளவுக்கு மார்க்கத்தை பின்பற்ற முடியுமோ அந்த அளவுக்கு பின்பற்ற வேண்டும் என்பதாகும்.
அடுத்து இத்தகையவர்களின் இன்னொரு தவறு சலஃப் எனும் நல்ல முன்னோர் வழி நடப்பது என்றாலே “இக்வானுல் முஸ்லிமீன்” போன்ற இயக்கத்தினரை கடுமையாக எதிர்ப்பதும் அவர்களுடன் முழுமையான விரோதம் பாராட்டுவதும் என்று புரிந்து வைத்திருப்பது.
இவர்களின் இந்த தவறான போக்குக்கு அடையாளம் இஸ்லாமிய சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் இக்வான்களை பற்றி ‘காரிஜிய்யாக்கள்’ என்பது போன்ற மோசமான பட்டப்பெயர்களால் பழிக்கிறார்கள். ( காரிஜிய்யாக்கள் என்போர் மிக மோசமான வழி கெட்ட கூட்டத்தினர் ) அதே சமயத்தில் ஃபிர்அவ்ன் தனம் கொண்ட மார்க்கத்தை அறவே மதிக்காத கொடியவர்களாக இக்வான்களின் எதிரிகளாக உள்ள ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் இது போன்ற கடுமையான வார்த்தைகளால் குறை கூறுவதில்லை. அவர்களுடன் விரோதம் பாராட்டுவதில்லை.
இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரிடம் தவறான கருத்துகள் உள்ளன என்றாலும் நல்ல முன்னோரின் வழிமுறைக்கு எதிரானவர்கள் என்றாலே இவர்கள்தான் என்கிற பிரச்சாரம் சரியில்லை.
எகிப்து போன்ற நாடுகளில் ஏற்ப்பட்ட குழப்பங்களுக்கு மூல காரணம் அங்கிருக்கும் கொடிய ஆட்சியாளர்கள் தான்.
ஆக சலஃப் வழிமுறையில் செல்வதாக சொல்லிக் கொண்டு இக்வானுல் முஸ்லிமீன் போன்றவர்களை எதிர்ப்பதும் அவர்களுடன் பகைமை பாராட்டுவதுமே அதற்க்கான அடையாளம் என்கிற மனோநிலையில் இருக்கும் சகோதரர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.
தங்களின் வழிகாட்டியாக இருக்கும் உலமாக்கள் அல்லாத வேறு உலமாக்களை தாழ்வாகக் கருதும் போக்கும் இத்தகையவர்களிடம் உண்டு.