சட்டங்கள்

July 08, 2023

பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்

பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்

-S.H.M. இஸ்மாயில் ஸலபி 

--------------------------------------------


மார்க்கச் சட்டங்களை இயற்றும் போது சில வேளை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு சில முடிவுகள் செய்யப்படலாம். அந்த முடிவுகள் வேறு சூழல்களுக்குப் பொருந்தாமல் கூட இருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் ஃபத்வா கொடுத்தவர் பற்றி எப்படி நடுநிலையாகப் புரிந்து கொள்வது என்ற விளக்கம் அவசியமாகும்.


உதாரணமாக, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் இனக் கலவர சூழல் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். இனவாதிகளால் முஸ்லிம்களின் பொருளாதார மையங்கள் அழிக்கப்படலாம் என்ற ஆபத்தான நிலை உள்ளது. அரச படையினரும் இனவாதிகளுக்குத் துணை நிற்பார்கள். முஸ்லிம்களின் உடைமைகளைப் பாதுகாக்க மாட்டார்கள் என்ற சூழ்நிலை நிலவுகின்றது.


இந்த சந்தர்ப்பத்தில் ஒரு மார்க்க அறிஞர் முஸ்லிம்கள் தமது உடமைகளைக் காப்புறுதி (இன்ஷூரன்ஸ்) செய்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். அப்படி காப்புறுதி செய்தால் முஸ்லிம்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டால் அதற்கான நஷ்ட ஈட்டை காப்புறுதி நிறுவனங்கள் வழங்க நேரிடும். எனவே, காப்புறுதி நிறுவனங்கள் முஸ்லிம்களது சொத்துக்களைப் பாதுகாக்கும் அழுத்தத்தை அரசுக்கு வழங்கும். இதன் மூலம் முஸ்லிம்கள் எதிரிகளது சூழ்ச்சியை முறியடித்து தமது பொருளாதாரத்தைக் காத்துக் கொள்ளலாம் என்பது இந்த மார்க்க அறிஞரின் எதிர்பார்ப்பு!


இது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலைக்காக கொடுக்கப்பட்ட ஃபத்வா. இதைச் சாட்டாக வைத்து சாதாரண நிலையிலும் காப்புறுதி செய்யலாம் என்று யாரும் சொல்ல முடியாது.


மேற்குறித்த பத்வாவில் சிலருக்கு உடன்பாடு இருக்கலாம். சிலருக்கு மாற்றுக் கருத்தும் இருக்கலாம். மாற்றுக் கருத்து உடையவர் தனது நிலையையும் மக்கள் மத்தியில் வைக்கலாம். காப்புறுதி செய்வது கூடாது என்றும், அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் காப்புறுதி செய்வது வட்டியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் கூட பிரச்சாரம் செய்யலாம். ஆனால், காப்புறுதி செய்வதை இந்த சூழலில் சரிகண்ட அறிஞரை வட்டிக்கு வக்காலத்து வாங்குகின்றார், வட்டிக் கம்பெனிகளுக்கு இலவச விளம்பரம் செய்கின்றார். அல்லாஹ் ஹராமாக்கிய வட்டியை ஹலாலாக்கிவிட்டார், அல்லாஹ்வுடன் போர் செய்யத் துணிந்துவிட்டார், மார்க்கத்தை மாற்றிவிட்டார் என்ற கோணத்தில் நின்று விமர்சிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. இது போன்ற ஒரு மனநிலைதான் இன்றைய தஃவாக் களத்தில் இருந்து வருகின்றது.


இந்த சூழலைப் புரிந்து கொள்வதற்காக உஸ்மான்(வ) அவர்கள் எடுத்த ஒரு முடிவு குறித்து விளக்கலாம் என நினைக்கின்றேன்.


ஜும்ஆவுக்கு இரண்டு அதான்:


நபி(ச) அவர்களது காலத்தில் ஜும்ஆவுக்கு ஒரு அதான்தான் சொல்லப்பட்டு வந்தது. இமாம் மிம்பரில் ஏறிய பின்னர் இந்த அதான் சொல்லப்படும். இமாம் மிம்பருக்கு ஏறும் முன்னர் கூறப்படும் அதான், நபியவர்கள் காலத்திலோ அபூபக்கர், உமர்(வ) அவர்களின் காலத்திலோ நடைமுறையில் இருக்கவில்லை. உஸ்மான்(வ) அவர்கள் தனது ஆட்சியின் மத்திம காலத்தில்தான் இமாம் மிம்பருக்கு ஏறுவதற்கு முன்னர் சந்தையில் ஒரு அதான் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.


மக்கள் அதிகரித்துவிட்டார்கள். அவர்கள் ஜும்ஆவுக்கு தாமதமாகி வருவதைத் தவிர்ப்பதற்காக முன்கூட்டியே ஜும்ஆ நேரம் தொடங்கிவிட்டதை நினைவூட்டி அச்சந்தையில் இருந்து மக்களை அனுப்புவதற்காக இந்த அதான் கூறப்பட்டது.


நபி(ச) அவர்களது காலத்தில் இருந்த ஒரு அதான் என்ற நடைமுறையே சரியானது என்பதால் நாமும் இன்று ஜும்ஆவுக்கு ஒரு அதான் மட்டுமே கூறி வருகின்றோம். இருப்பினும் இரண்டு அதான் எந்த ஆதாரமும் இல்லாத பித்அத்தாக நாம் பார்க்கவில்லை. உஸ்மான்(வ) அவர்கள் செய்த ஒரு இஜ்திஹாதாக மட்டுமே பார்க்கின்றோம். இதைப் புரிந்து கொள்வதற்காக உஸ்மான்(வ) அவர்களது தரப்பு நியாயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


அழைப்பாக மட்டுமன்றி அறிவிப்பாகவும் அமைந்த அதான்:


அதான் என்பது தொழுகைக்கான அழைப்புதான். எனினும் பள்ளியை நோக்கி அழைக்கும் அழைப்பாக மட்டும் இல்லாமல் நேரத்தை அறிவிக்கும் அறிவிப்பாகவும் நபி(ச) அவர்கள் அதானைப் பயன்படுத்தியுள்ளார்கள்.


நோன்பு காலத்தில் மக்களில் சிலர் ஸஹருடைய நேரத்தில் உறங்கிக் கொண்டிருப்பார்கள். மற்றும் சிலர் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இச்சந்தர்ப்பத்தில் நபி(ச) அவர்கள் சுபஹுக்கு முன்னர் மற்றுமொரு அதானை அறிமுகப்படுத்தினார்கள். அதிலும் தொழுகைக்கான அழைப்பு இருக்கும். ஆனால், அதன் நோக்கம் தொழுகைக்காக மக்களை அழைப்பது அல்ல. உறங்கும் மக்களை விழிப்பூட்டுவதும், இபாதத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஸஹருடைய நேரம் நெருங்கிவிட்டதை உணர்த்துவதும் இந்த அதானின் நோக்கமாகும்.


இந்த சுன்னாவை அடிப்படையாகக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஜும்ஆ நேரம் நெருங்கிவிட்டதை உணர்த்துவதற்காக உஸ்மான்(வ) உருவாக்கியது அவரது சுய இஜ்திஹாதாகும். உணவுக்காக மக்களை வீட்டுக்கு அனுப்புவதை விட, ஸஹருடைய நேரம் நெருங்கிவிட்டதை உணர்த்துவதை விட ஜும்ஆவுக்காக மக்களைப் பள்ளிக்கு அனுப்புவதை முக்கியமானதாக அவர் கண்டிருக்கலாம்.


ஒருவர் உஸ்மான்(வ) அவர்களது இந்த இஜ்திஹாதை ஏற்காதவராக இருக்கலாம். ஆனால், உஸ்மான்(வ) அவர்கள் பித்அத்தான அதானை உருவாக்கிவிட்டார் என்று கூறக் கூடாது. உஸ்மான்(வ) அவர்களது இஜ்திஹாதை ஏற்று நடைமுறைப்படுத்துபவர்களை எவ்வித ஆதாரமுமற்ற பித்அத்தை செய்யும் பித்அத்வாதியாகவும் பார்க்கக் கூடாது.


சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில முடிவுகளை எடுப்பதற்கு இந்த மார்க்கம் அனுமதியளித்துள்ளது என்ற அடிப்படையை நபித்தோழர்கள் புரிந்து வைத்திருந்ததினால்தான் உஸ்மான்(வ) அவர்கள் புதிய பித்அத் ஒன்றை ஏற்படுத்திவிட்டார்கள் என நபித்தோழர்கள் அவரைக் கண்டிக்கவில்லை. இன்று சிலர் நபித்தோழர்களை விட தாம் சுன்னாவைப் புரிந்து கொண்டதைப் போன்றும் அவர்களை விட அதிகமாக பித்அத்தை வெறுப்பது போலவும் ‘சீன்’ காட்டுவதுதான் பொறுக்க முடியாதுள்ளது.


சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஃபத்வாக்கள் மாறுபடுவது போன்றே மக்களதும், தனி மனிதர்களினதும் நிலைமைகளுக்கு ஏற்பவும் ஃபத்வாக்கள் மாறுபடலாம். ஆனால், அது பொதுச்சட்டமாகாது. கொலை செய்யும் எண்ணத்துடன், கொலைகாரனுக்கு மன்னிப்பு உண்டா? எனக் கேட்பவருக்கு மன்னிப்பு உண்டு எனப் பதிலளிப்பது அவனை கொலை செய்யத் தூண்டும் என்பதாக நாம் கருதினால், இல்லை என பதில் சொல்லலாம். அது அந்த நபருக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றதாக இருக்கும். ஆனால், பொதுச்சட்டமாகாது.


இவ்வாறே சில அறிஞர்களிடம் நோன்பாளி முத்தமிடலாமா? எனக் கேட்ட போது முடியாது என இளைஞனுக்குப் பதிலளித்தவர்கள். இதே கேள்வியை முதியவர் கேட்கும் போது முடியும் எனப் பதிலளித்துள்ளனர். இப்படித்தான் பதிலளிக்க வேண்டும் என சட்டம் கூறவில்லை. கேள்வி கேட்பவரின் நிலையைக் கவனத்திற் கொண்டு அவருக்கு நன்மையை நாடி அளிக்கப்படும் பதில்கள் இவைகள். இவை பொது விதியாகவும் மாட்டாது. இப்படிப் பதில் சொன்னவர் குர்ஆன், சுன்னாவுக்கு முரண்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டவராகவும் மாட்டார். இருப்பினும் எது உண்மையோ அதைத் தெளிவுபடுத்துவதையே நாம் சரியானதாகவும், முறையான வழிமுறையாகவும் கருதுகின்றோம். இப்படிப் பதில் சொன்னால் அவரை விமர்சிக்கும் போக்கு பிழையானது என்பதை புரிய வைப்பதற்காக மட்டுமே இதை இங்கே குறிப்பிடுகின்றோம் என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

***

Admin
419 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions