ஆய்வுகள் | மற்றவை by - இமாமுத்தீன் ஹஸனீ On Oct 07, 2023 Viewers: 230 0
மஸ்ஜிதின் ஒழுக்கங்கள்
- இமாமுத்தீன் ஹஸனீ
மஸ்ஜிதுகள் அல்லாஹ்வின் வீடு ஆகும். நாம், நமது வீடுகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது போன்று அல்லாஹ்வின் வீடாகிய மஸ்ஜிதை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். இந்த செயலுக்கு அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலி கிடைக்கும். அதுபோன்று, மஸ்ஜிதுகள் என்பன அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், அவனை திக்ர் செய்வதற்காகவும், அவனிடம் பிரார்த்தனை செய்வதற்காகவும், மார்க்க கல்வியை கற்றுக்கொள்வதற்காகவும் உள்ள இடமாகும். எனவே, அதற்குரிய கடமையை நாம் சரியாக கொடுக்க வேண்டும். மஸ்ஜித்கள் என்பது அல்லாஹ்வின் வீடு மற்றும் மறுமையின் கடைவீதி ஆகும். அதை உலகத்தின் வீடு மற்றும் உலக கடைவீதியைப் போன்று ஆக்கி விடக்கூடாது.
ஐந்து நேர தொழுகைகளைக் கொண்டு மஸ்ஜிதை செழிப்பாக்குவதும் இன்னும் ஜமாஅத்துடன் அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவதும் நாம் மஸ்ஜிதுக்கு செய்யவேண்டிய முதல் ஒழுக்கம் ஆகும். மேலும், மஸ்ஜிதின் ஒழுக்கம் சம்பந்தமாக வந்திருக்கும் ஹதீஸ்களின் கருத்துகளை கீழே குறிப்புகளாக வகைப்படுத்தியுள்ளோம். அவற்றை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், நமது மஸ்ஜிதுகளிலும் அதை விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
1. ஒழுக்கமான, தூய்மையான, முழுமையான ஆடை அணிந்து உடையாலும் உடலாலும் அழகிய தோற்றத்தை வெளிப்படுத்துவது. முடிந்தால் நறுமணம் பூசிக்கொள்வது. (கருத்து - அல்குர்ஆன் 7:31)
2. மஸ்ஜிதுக்குள் நுழையும்போது வலது காலை வைத்து நுழைவதும் இடது காலை கொண்டு வெளியேறுவதும் சுன்னா -நபிவழி ஆகும். (ஹாகிம் – 791)
3. மஸ்ஜிதுக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் துஆ ஓத வேண்டும். உள்ளே நுழையும் போது, அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்ம(த்)திக (இறைவா! உனது கருணையின் வாசல்களை எனக்கு திறந்து கொடு!) என்றும், வெளியேறும்போது, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ஃபழ்ளி(க்)க (இறைவா! நிச்சயமாக நான் உன்னிடம் உனது அருளை வேண்டுகிறேன்) என்றும் ஓத வேண்டும். (முஸ்லிம் -713)
4. அதுபோன்று, மஸ்ஜிதுக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாமும் சலவாத்தும் கூற வேண்டும். (அபூதாவூத் – 465)
5. அதுபோன்று, மஸ்ஜிதுக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும். நுழையும் போது, அவூது பில்லாஹில் அழீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வ ஸுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (மகத்துவமிக்க அல்லாஹ்வைக் கொண்டும், சங்கைமிகு அவனது முகத்தைக் கொண்டும், நிலையான அவனது ஆட்சியைக் கொண்டும் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு பாதுகாவல் தேடுகிறேன்) என்றும், வெளியேறும்போது, அல்லாஹும்மஃஸிம்னீ மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (இறைவா! விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு என்னை நீ பாதுகாத்துக் கொள்!) என்றும் கூற வேண்டும். (இப்னு மாஜா-773, அபூ தாவூத்-466)
6. தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு வரும்போது அவசரப்படாமல், அமைதியாக, இன்னும் கம்பீரமாக வரவேண்டும். (புகாரி -636)
7. மஸ்ஜிதில் நுழைந்து அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழவேண்டும். (புகாரி - 444)
8. மஸ்ஜிதில் வியாபாரம், கொடுக்கல் வாங்கல் போன்ற செயலில், பேச்சில் ஈடுபடக்கூடாது. அதுபோன்று, தொலைந்துபோன பொருளை மஸ்ஜிதில் விசாரிப்பதும் அதை அறிவிப்பு செய்வதும் கூடாது. (திர்மிதி - 1321)
9. மஸ்ஜிதில் அமர்ந்து கொண்டு உலக விஷயங்களை, வீணான பேச்சுகளை, இன்னும் தேவையற்ற விவாதங்களை பேசாமல் இருக்க வேண்டும். அதுபோன்று, சத்தமிட்டு பேசுவதும், சிரிப்பதும் கூடாது. (முஸ்லிம் – 1879)
10. அருவருக்கத்தக்க, மோசமான வாடை தரும் வஸ்துக்களை (வெங்காயம், பூண்டு) சாப்பிட்ட நிலையில் மஸ்ஜிதுக்கு வரக்கூடாது. (புகாரி – 855)
11. மது அருந்தியவர், குளிப்பு கடமையானவர் மஸ்ஜிதுக்குள் நுழையக் கூடாது. (அல்குர்ஆன் 4:43) (முஸ்லிம்-890)
12. மஸ்ஜிதில் அதான் – பாங்கு சொல்லப்பட்டதற்கு பிறகு அவசியத் தேவையின்றி மஸ்ஜிதை விட்டு வெளியேறக்கூடாது. (முஸ்லிம் – 655)
13. மஸ்ஜிதை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். (அபூ தாவூத் - 455)
14. தொழுகையாளிகளுக்கும், பிற அமல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் தொந்தரவாக அமையும் விதத்தில் அல்குர்ஆனை சத்தமிட்டு ஓதக்கூடாது. (அபூ தாவூத் - 1332)
15. மஸ்ஜிதில் நாம் உட்காரும்போது ஏற்கனவே உட்கார்ந்து கொண்டிருக்கின்ற ஒருவரை எழுப்பிவிட்டு நாம் அவ்விடத்தில் உட்காரக்கூடாது. (புகாரி – 6270)
யா அல்லாஹ்! உன்னுடைய இந்த மஸ்ஜிதில் உனது கருணையின் வாசல்களை எங்களுக்கு திறந்து வைப்பாயாக! இந்த இடத்தில் எங்களுக்கு மன நிம்மதியை கொடுப்பாயாக! உன்னை மனஓர்மையுடன் வணங்குவதற்கு வாய்ப்பளிப்பாயாக! மீண்டும் மீண்டும் உன்னை வணங்க வருவதற்கு எங்களுக்கு வாய்ப்பளிப்பாயாக! அல்லாஹ்வே! எங்களுடைய நல்லறங்களை ஏற்றுக்கொள்வாயாக! ஆமீன்.
***